Pages

Friday, July 31, 2026

ஜமுனாராணி - பாட்டொன்று கேட்டேன்

இந்தியத் திரையிசையின் மூத்த பாடகி காலமானார் என்று தான் ஜமுனாராணியின் பிரிவை அறிவிக்க வேண்டும்.

வயதளவில் பி.சுசீலா அம்மா மூத்தவர், எஸ்.ஜானகி சம வயது கொண்டவர். ஆனால் இவர்களுக்கெல்லாம் மூத்த பாடகி ஜமுனாராணி தான்.

தன்னுடைய ஏழு வயதில் பாட வந்தவர், எண்பத்தெட்டாவது வயதில் மறைந்து விட்டார்.

நடிகை பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணாவின் தன் குடும்ப நட்பின் நிமித்தம், ஜமுனாராணியின் திறமையை அடையாளம் கண்டு “தியாகையா” என்ற படத்தில் பாடவைக்கப் பரிந்துரைக்கிறார்.

படத்தின் இசையமைப்பாளர் நாகையாவின் இசையில் ஜமுனாராணியின் திரைப்பயணம் அப்போது தொடங்குகிறது.

ஜமுனாராணிக்கு அடையாளம் நிறுவிய பாடல்களை எடுத்துக் கொண்டால் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில் அவை அணிவகுக்கும்.

“மரகதம்” படத்திலே “குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே” சந்திரபாபுவின் துள்ளிசைக்கு நிகராகச் சதிராட்டம் போடும் ஜமுனாராணியின் குரல்.

வி.கே.ராமசாமி தயாரித்து சிவாஜி கணேசன் நடித்த “செல்வம்” படத்திலே நாகேஷ் பரிந்துரையில் தாராபுரம் சுந்தரராஜன் ஒரு பாடலை ஜமுனாராணியோடு பாடுகிறார். அதுவே தாராபுரத்தாரின் அடையாளமாகி விட்ட “எனக்காக வா வா உனக்காக வா வா...” 

கே.வி.மகாதேவனை திரையுலகத்தார் பாசமாக “மாமா” என்று அழைப்பதுண்டு. அவரின் இசையில்

“மாமா மாமா மாமா” (குமுதம்) பாடலை செளந்தரராஜன் கூட இணைந்து பாடியவருக்கு இன்னொரு சிறப்புமுண்டு.

ஆரம்பத்தில் குழுப்பாடகியாக இரட்டைப் பாடகிகளில் ஒருவராகப் பாடிவந்தவருக்கு ஒரு நாயகிக்கான குரலாக அமைய வைத்த பாடல்

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் “வளையாபதி” படத்தின் வழியாக அமைந்தது. அதுவும் அப்போது தன் திரையிசைப் பயணத்தைத் தொடங்கிய T.M.செளந்தரராஜனோடு இணைந்து கொண்ட இரு ஜோடிப் பாடல்கள்.

குலுங்கிடும் பூவிலெல்லாம்

தேனருவி கண்டதனால்

வண்டு காதலினால் நாதா

தாவிடுதே தாவிடுதே இன்பம் மேவிடுதே...

https://www.youtube.com/watch?v=qlHQ8I_4hKQ

பாவேந்தர் பாரதிதாசன் வரிகளில்அந்த வளையாபதி பாடலை மறக்கத்தான் முடியுமா?

சுதர்சனம் இசையில் “தெய்வப் பிறவி” படத்தில் ஜமுனாராணிக்குப் புகழ் சேர்த்த இரண்டு பாடல்கள். “தாரா தாரா வந்தாரா” பாடலை அவர் பாடிய விதத்தை ரசித்து “காளை வயசு கட்டான சைசு” என்று இன்னொன்றையும் கொடுத்தார்களாம்.

“ஓஓஓ தேவதாஸ் (தேவதாஸ்) தொட்டு ஜமுனாராணிக்குப் புகழ் சேர்த்த பாடல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், சிங்களம், மலையாளம் என்று அவரின் குரல் மொழி கடந்தது.

"பலே பாண்டியா" படத்தில் "ஆதிமனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இதுதான்" என்ற அற்புதமான பாடலை ஶ்ரீனிவாசுடன் கொடுத்தவர், அவரோடு இணைந்து இணைக்குரலாக இவரும், செளந்தரராஜன், சுசீலா இணையில் "அத்திக் காய் காய் காய்" பாடலும் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையர் கொடுத்த அற்புதங்களில் ஒன்று.

பெண் பாட்டுக்கார ஜோடிக் குரலாகப் பலதில் அணி சேர்ந்தவர் சுசீலாவோடு “புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக” என்று இரு கோடுகள் படத்தில் வி.குமாரின் இசையில் கொடுத்ததும் புகழ் சேர்த்தது. பதிவை எழுதியவர் கானாபிரபா.

கவியரசு கண்ணதாசன் பரிந்துரையில் தனக்குத் திரையிசைப் பாடல்கள் கிட்டியதைச் சொன்ன ஜமுனாராணிக்கு, கண்ணதாசன் தயாரிப்பில் “மாலையிட்ட மங்கை” படத்தில் இடம்பெற்ற “செந்தமிழ்த் தேன்மொழியாள்” தனிப்பாடலும் தனியிடம் கொடுத்தது.

"சித்திரத்தில் பெண்ணெழுதி சீர் படுத்தும் மாநிலமே" (ராணி சம்யுக்தா) பாடல் ஜமுனாராணிக்கான இன்னொரு அழகியல் பாடல்.

இந்திய வானொலியில் தமிழ்த் திரையிசைப்பாடல்களுக்குக் களம் அமைக்காத அந்தக் காலத்தில் இலங்கை வானொலியும், ஒலிபரப்பாளர் மயில்வாகனனும் பாடகர் பெயரை வெகுஜனங்கள் மத்தியில் கொண்டு போன பெருமைக்குரியவர்கள் என்று நன்றி பாராட்டுவார்.

ஜமுனாராணியின் குரல் சிங்களத்திலும் ஒலித்தது.

சினிமாஸ் குணரத்தினம் தயாரிப்பில் “சுஜாதா” திரைப்படத்தில் எஸ்.தட்சணாமூர்த்தி இசையில் அந்த வாய்ப்பு முதலில் வந்தது.

அந்தக் காலத்தில் தென்னிந்தியப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள் வரவு சிங்கள சினிமாவில் இருந்ததோடு, அந்தப் பின்புலத்தில் தமிழ்த் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் பங்களிப்பும் உண்டு.

தொண்ணூறுகளிலும் கூட ஜமுனாராணியின் குரல் தமிழ்த் திரையிசையில் கலந்திருக்கிறது.

ஆபாவாணனின் இணை இசையில், கியான் வர்மா இசையில் தன் தோழி ஜிக்கியோடு பாடிய 

“இரவு நாடகம் இரவல் பூமுகம்”

https://www.youtube.com/watch?v=lNXsiCv8eM4 

குறிப்பிடத்தக்கது.

ஜிக்கியின் அந்திம காலத்தில் அவரோடு துணைக்கிருந்தவர், தன் தோழியின் வேண்டுகோளில் “துள்ளாத மனமும் துள்ளும்” பாடலை மேடை தோறும் பாடி அவரை ஞாபகத்தில் இருத்துவேன் என்று மனதோடு மனோ நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருக்கிறார் ஜமுனாராணி. 

“நான் சிரித்தால் தீபாவளி” என்ற “நாயகன்” படப் பாடலை

எண்பதுகளின் திரை ரசிகர்கள் நினைவுகூர்ந்து ஜமுனாராணியை அஞ்சலிக்கிறார்கள்.

அந்தப் பாடலுக்கு இன்னொரு சிறப்பிருக்கிறது.

தமிழில் மட்டுமல்ல, அந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பிலும் பாடியவர் ஜமுனா ராணியே தான். பதிவை எழுதியவர் கானாபிரபா. தமிழில் இணைந்து பாடியவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி, தெலுங்கிலே சுசீலாவோடு பாடினார்.

பாட்டொன்று

கேட்டேன்...

பரவசமானேன்...

நான் அதை

பாடவில்லை...ஹோ….

காற்றினைத் தழுவி வரும் ஜமுனாராணியின் குரல் அவரை உயிரூட்டிக் கொண்டே இருக்கும். 

கானா பிரபா