
புகழ் சேர்க்கும் புது வாழ்வு
புலர்கின்ற நேரமிது
நிகழ்காலக் கருவறையில்
நம் எதிர்காலம் துயில்கின்றது
கருவழிக்கும் கலியிருளை
செங்கதிர் வந்து கிழிக்கிறது
கரு விழியே
கண் மலரே
கரு விழியே
கண் மலரே
கண் திறந்து
காணாயோ…..
https://youtu.be/zT4KPjJfy8M?si=c7nUIs2lK5sCS35s
இப்படியாக ஒரு குறும்பாடலையும்
எத்தனை கோணம் எத்தனை பார்வை
https://youtu.be/sqKKG6Mojio?si=28akaPKFn-vorJnn
என்ற பொதுவுடமை பொருள் பொதிந்த பாடலையும் மலேசியா வாசுதேவன் பாடவும், இசைஞானி இளையராஜா இசையில் எழுதியவர் எழுத்தாளர் ஜெயகாந்தன்.
“எத்தனை கோணம் எத்தனை பார்வை” படம் கூட முழுமையாக எடுக்கப்பட்டு இன்னும் வெளிவராமல் முடங்கியிருக்கிறது. அதன் பிரதி எங்கே இருக்கிறதென்றே தெரியவில்லை என்றார் படத்தின் இயக்குநர் B.லெனின்.
ஒரு சாஸ்திரிய இசைப் பின்னணி கொண்ட கதை என்பதைப் பாடல்களைக் கேட்டமாத்திரம் அனுமானிக்க முடிந்தது. அதை உறுதிப்படுத்துமாற்போல இந்தப் படக் கதை பின்னாளில் வந்த “சிந்து பைரவி” ஐ ஒத்தது என்றார் லெனினின் சகோதரர் ஹிருதயநாத்.
விக்கிப்பீடியாவிலும் ஜெயகாந்தனின் “எத்தனை கோணம் எத்தனை பார்வை” என்ற நாவலில் இருந்து படமானது என்று குறிப்பிட்டார்கள்.
ஆனால் அந்த இரு தகவல்களுமே முற்றிலும் தவறானவை. லெனின் கொடுத்த ஒரு பேட்டியில் ஜெயகாந்தனின் “கரு” மற்றும் “காத்திருக்க ஒருத்தி” ஆகிய நாவல்களை இணைத்து எடுக்கப்பட்ட படம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்காகவே இந்த இரண்டு நாவல்களையும் படித்தேன். பின்னர் படத்தின் ஒளிப்படங்களோடு பொருத்திப் பார்த்த போது சரியாக ஊகிக்க முடிந்தது.
“கரு” கதையில் முற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு பெண், திருமணம் முடித்ததுமே குழந்தைப் பேறு என்ற சம்பிரதாயத்தில் உழல விரும்பாதவள். அவளின் இணையாக வருபவன் ஆதரவின்றி அலைக்கழிந்து, மல்யுத்தம் கற்ற வீரன். அவனின் பின்னணி மற்றும் போட்டிக் குழுப் பெயர் எல்லாம் அச்சொட்டாக “சார்பாட்டா பரம்பரை” படத்திலும் வருகிறது. அந்தக் கதையின் நாயகர்களாக ஶ்ரீப்ரியா மற்றும் தியாகராஜனைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
இரண்டாவது கதை “காத்திருக்க ஒருத்தி”. திருமணமானதுமே இசைக் கலைஞனான தன் கணவனின் குடி, மாதுப் பழக்கத்தால் வெறுத்துப் போய் அவனை ஒதுக்கும் ஒரு பெண் பின்னர் தன் மகனின் திருமணத்தின் போது தன் கணவனை எதிர்கொள்ளும் கதை.
இந்தக் கதையில் இசைக் கலைஞனாக சாருஹாசனும், மகனாக சுரேஷ் மற்றும் சுரேஷின் காதலியாக நளினி ஆகத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்.
இந்த ஊகங்களைப் படத்தின் எல்பி ரெக்கார்ட்ஸ் காட்சிகள் நிரூபிக்கின்றன.
இயக்குநர் B.லெனினுடன் இதற்காகவே ஒரு பேட்டி செய்ய ஆவல். அவரின் தொடர்பிலக்கம் தேடுகிறேன். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.
இன்று எழுத்தாளர் ஜெயகாந்தனின் பிறந்த தினம்.
கானா பிரபா
24.04.2025