மல்லிக் கொடியாக ஒன்ன விட்டேன்
உசிருக்குள் கோயில் கட்டி
ஒன்னக் கொலு வச்சுக் கொண்டாடினேன்
நேற்றில் இருந்து இந்தப் பாடலை என் அடி மனது முணுமுணுத்துக் கொண்டே இருந்தது.
பாடல் வரிகளைக் கட்டிய ரவிசங்கர் நினைப்பும் வந்து போனது.
இன்று மனோஜ் பாரதிராஜாவின் முதலாவது நினைவு தினம்.
“வருஷமெல்லாம் வசந்தம்" படம் மனோஜுக்குப் பேர் சொல்ல வாய்த்த படம். ஒப்பீட்டளவில் அவருக்கு வெற்றிப் படமே.
ஆனால் அந்தப் படத்தை இயக்கிய ரவிசங்கர், நாயகன் மனோஜ், உப நாயகன் குணாள் மூவருவே அகால மரணத்தை எதிர்கொண்டதொரு துர்பாக்கியம்.
“புத்திர சோகம் பெருஞ்சோகம்" என்பார் என் அப்பா.
பாலசந்தரும், பாரதிராஜாவும் மகனார் இழப்போடு உடைந்து போய் விட்டார்கள்.
ரவிசங்கர் ஒரு திறமையான எழுத்தாளர் என்பதை பத்திரிகையாளர் கல்யாண்குமார் அவர்கள் அடையாளம் கண்டு கொண்டது “குதிரை” என்ற சிறுகதையை அவர் சார்ந்த வார இதழிலுக்கு அனுப்பிய போது கண்டு கொண்டது. அந்தக் கதையை கே.பாக்யராஜிடம் படிக்கக் கொடுக்கவும், அவர் ரவிசங்கரைப் பாராட்டி விட்டு “இது நம்ம ஆளு" படத்தில் இருந்து உதவி இயக்குநராக வைத்துக் கொண்டராகவும், கல்யாண்குமார் சார் அவரது நினைவுப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆராரோ ஆரிரோ படத்தில் வசன உதவி இரா.ரவிசங்கர் என்று எழுத்தோட்டத்திலும் அங்கீகாரம் பெற்றார்.
பின்னர் இயக்குநர் விக்ரமன் அவர்களின் பாசறையில் ரவிசங்கர் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
தன்னுடைய இசையமைப்பாளர்கள் எஸ்.ஏ.ராஜ்குமார் போன்றோரின். மெட்டுக்கு அழகான வரிகளை இட்டுக் கட்டுவதில் சமர்த்தர் என்று தன் உதவி இயக்குநர் ரவிசங்கரைப் பாராட்டியிருக்கிறார்.
விக்ரமனே ஆர்.பி.செளத்ரியிடம் ரவிசங்கருக்கான “வருஷமெல்லாம் வசந்தம்" படத்தைத் தயாரிக்க அறிமுகப்படுத்தி வைத்தவர்.
“சூர்ய வம்சம்" படத்தில் “ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ” என்ற மெல்லிசைப் பாடலுக்கு நேரெதிராக “சலக்குச் சரிகைச் சேலை” பாடலையும் எழுதி இரு பாடல்களிலும் புகழ் பூத்தவர்.
“காற்றுக்குத் தூது விட்டு
கவிதைகள் பாடச் சொல்லு...”
அந்த வரிகளைச் சிலாகிக்காதோர் உண்டோ?
அத்தோடு இன்னொன்றாக
“வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்"
என்று விக்ரமன், எஸ்.ஏ.ராஜ்குமாரின் இன்னொரு மாபெரும் வெற்றிப் படைப்பான “உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்" படத்திலும் தன் பாடல் வரிகளால் அணி சேர்த்தவர்.
தொடர்ந்து அதே கூட்டணியின் மிலேனியத்தின் திறவுகோலாய் அமைந்த “வானத்தைப் போல" படத்தில்
“மைனாவே மைனாவே...” என்று படத் தொடக்கப் பாடலிலேயே அவர் வரிகளோடு தான் அந்த வெற்றிச் சித்திரம்.
இந்தப் படங்களில் எல்லாம் வசன ஒத்துழைப்பு என்று இவர் பெயரும் கூடவே வந்தது.
விக்ரமன் & சிற்பி கூட்டணி மீண்டும் இணைந்த “உன்னை நினைத்து" வழியாக “யார் இந்த தேவதை”யோடு வந்தார் ரவிசங்கர்.
தன் குரு நாதருக்கு லட்டு லட்டாய்ப் பாட்டெழுதியவர் தன் படத்தில் இல்லாமலா? வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் சிற்பியோடு கை கோர்த்தவர், “அனார்க்கலி அடியே அனார்க்கலி", முதன் முதலாய்" ஆகிய வெற்றிப் பாடல்களோடு ஐந்து பாடல்களை வரவில் வைத்தார்.
இங்கே தான் படத்தின் அடி நாதமாய் அமைந்த
“எங்கே அந்த வெண்ணிலா...
எங்கே அந்த வெண்ணிலா”
பாடலையும் தன் படைப்பின் கருவூலமாகக் கொடுத்தார்.
“ஒரு தேவதை வந்து விட்டாள்
உன்னைத் தேடியே...”
தன் சகா ராஜகுமாரனின் முதற்படமான “நீ வருவாய் என" விலும் ரவிசங்கர் தொடர்ந்தார்.
தேவாவின் இசைப் பாசறையில்
“பாரதிக்கு கண்ணமா நீ எனக்கு உயிரம்மா” (ப்ரியமுடன்),
“லட்ச லட்சமா” ( வெற்றிக் கொடி கட்டு)
உள்ளிட்ட பாடல்கள் பலவற்றை எழுதியிருக்கிறார்.
ஆகோஷ் கூட்டணியில் பிறந்த
“நாடோடிப் பாட்டுப் பாட" (அரிச்சந்திரா)
இன்னொரு வெற்றிக் கதை பேசும்.
அவர் கொண்ட அறிவின் விசாலத்துக்கு அவருக்குக் கிடைத்த புகழின் உயரம் குறைவு என்பார் இயக்குநர் விக்ரமன்.
“யார் இந்த தேவதை” பாடலுக்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்ற ரவிசங்கர் இந்தப் பாடல்களையெல்லாம் மீளக் கேட்கும் போது உயிர் பெற்று வருகிறார்.
காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக....
கானா பிரபா
25.03.2026

