Pages

Saturday, June 13, 2026

பாரதிராஜாவும் பாவலர் சகோதரர்களும்


“நான் பண்ணைப்புரத்துக்கு சுகாதாரப் பரிசோதகரா வந்தப்ப பாஸ்கர் தான் முதலில் ஒட்டிக்கிட்டான்,

அப்புறமா கங்கை அமரன் சர்ச் இல் நடக்கும் பிரசங்கத்துக்குக் கூட்டிட்டுப் போவான்

ராஜா தன்னோட வீட்டுக் கதவில் கம்பி கட்டி வாசிப்பான், மூங்கிலைச் சுட்டுப் புல்லாங்குழல் ஆக்குவான்,

அப்புறம் ஒன்றாக நாடகம் போட்டோம்”

இப்படி பாரதிராஜா பண்ணைப்புரம் சகோதரர்களைச் சந்தித்த கதையைச் சொல்லி இருப்பார்.

“நமக்கு வாய்ப்புத் தேடி ஒவ்வொரு கம்பெனியா ஏறி இறங்குவார் அண்ணன் பாஸ்கர்” 

என்று இளையராஜா தன் சகோதரர்களைப் பற்றிச் சொல்லி இருப்பார்.

பாஸ்கர் எண்பதுகளின் இறுதிவரை இளையராஜாவுக்காக இயங்கிய ஒரு நிழல் பொதுசனத் தொடர்பாளர். 

அவரைப் போல போல ஒரு இயல்பான, நட்பான மனிதரைப் பார்க்கவே முடியாது என்பார் சித்ரா லட்சுமணன். 

“என்னோட மருத்துவச்சி (அன்னக்கிளி) கதை இளையராஜா இசையில் தான் வரணும்னு இருந்தேன்”

என்பார் கதாசிரியர் செல்வராஜ்.

அவரே பஞ்சு அருணாசலத்திடம் இளையராஜாவை அறிமுகப்படுத்தி அன்னக்கிளி வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கிறார்.

“இவங்க பாவலர் சகோதரர்கள் என்னோட சகோதரர்கள் மாதிரி” என்று எஸ்பிபிக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் பாரதிராஜா. எஸ்பிபியோடு கூட்டணி போட்டுப் பாட்டுக் கச்சேரிகள் நடத்தினார்கள்.

இளையராஜா இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் இடம் உதவியாளராகச் சேர்ந்த பின்னர், புட்டண்ண கனகல் இன் பெல்லி மோடா கன்னடப் படத்தைப் பார்த்த பாரதிராஜா அவரிடம் உதவியாளராகச் சேர வேண்டும் என்று ஆசையை வெளிப்படுத்த, ஜி.கே.வெங்கடேஷ் உதவுகிறார். அது குறித்து இன்னொரு விரிவான பகிர்வைப் பகிர்கிறேன்.

மேற்கண்ட வரலாறு எல்லாமே தானாக வந்தது. காலம் அவர்களை ஒன்று சேர்த்தது.

சாதனையாளர் ஆனார்கள்.

இதை வைத்தே அற்புதமானதொரு திரைக்கதை அமைக்கலாம்.

வெற்றியை காலமும், சந்தர்ப்பமும் தீர்மானிக்கும். அது எல்லாமே முற்கூட்டியே நம்மை அறியாமல் தீர்மானிக்கப்பட்ட கணக்கு.

கானா பிரபா