Pages

Wednesday, June 17, 2026

பாரதிராஜா பெயரில் உள்ள பாரதிராஜாவின் பெயரில் இல்லாத மருத்துவமனை



பாரதிராஜா பெயரில் உள்ள பாரதிராஜாவின் பெயரில் இல்லாத மருத்துவமனை

சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் நீண்டு நிமிர்ந்திருக்கிறது பாரதிராஜா மருத்துவமனை. அதன் முகப்பில் பாரதிராஜாவின் படம் போட்டு “இங்கே Seniors க்கு முதல் மரியாதை” என்று பதாகை கூட இருக்கிறது.

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைந்த சமயம், அவருக்கென்ன சொந்தமா பெரிய மருத்துவமனையே இருக்கிறதே என்று கூடப் பேசினார்கள்.

ஆனால் உண்மை என்ன?

டாக்டர் C.நடேசன் பாரதிராஜாவின் குடும்ப மருத்துவர். அவர் குடும்பத்தில் ஏதேனும் என்றால் ஓடோடி வருவாராம்.

அத்தோடு ஏழைகளுக்குக் கருணையோடு மருத்துவ உதவி செய்யும் நற் சிந்தனை கொண்டவராம்.

நிறம் மாறாத பூக்கள் படம்

எடுத்துக் கொண்டிருந்த சமயம், பாரதிராஜாவிடம் ஒரு படம் பண்ண வேண்டி ஒரு லட்சம் ரூபா கொடுத்தாராம். ஆனால் படம் உருவாகவில்லை. பதிவை எழுதியவர் கானா பிரபா

சில காலம் பின் அவரின் தங்கை திருமண ஏற்பாடுகளைச் செய்வதை அறிந்து, முன்பு கொடுத்த ஒரு லட்சத்தோடு மேலதிகமாகப் போட்டு இரண்டு லட்சமாகக் கொடுக்கிறார் பாரதிராஜா.

தன்னுடைய உதவியாளர் வடுகநாதன்,  தயாரிப்பு நிர்வாகி ஜெயக்குமார் ஆகியோருக்கு உதவி செய்வோமே என்று நினைத்து “கடலோரக் கவிதைகள்” படத்தை அவர்களைத் தயாரிப்பாளர்களாக வைத்து எடுக்கிறார். 

படம் முடிந்து, வெளியாகி வெற்றிகரமாக ஓடிய பிறகு என்னுடைய கையில் 24 லட்சம் ரூபாய் லாபமாக கிடைத்தது. இந்தப் பணத்தைத் தயாரிப்பாளர்களுக்குப் பிரித்துக் கொடுக்க நினைத்தபோதுதான் என் நினைவுக்கு வந்தார் டாக்டர் சி.நடேசன்.

இந்த நேரத்தில்தான் “ஏன் நடேசனையும் இந்தக் ‘கடலோரக் கவிதைகள்’ படத்தில் ஒரு பார்ட்னராகச் சேர்க்கக் கூடாது…?” என்ற எண்ணம் எனக்குள் வந்தது. உடனேயே அவரை சந்தித்து விஷயத்தைச் சொன்னேன். அவர் முதலில் தயங்கினார். ஆனால் நான் விடாப்பிடியாக “நீங்களும் இந்தப் படத்துல ஒரு பார்ட்னர்தான்…” என்று சொல்லி கையெழுத்து வாங்கினேன்.

அதன் பின்பு வடுகநாதனையும், ஜெயக்குமாரையும் அழைத்து அவர்களிடத்தில் இதைச் சொன்னேன். அவர்களோ “நீங்க எது செஞ்சாலும் எங்களுக்கு சரிதான் ஸார்…” என்று சொல்லிவிட்டார்கள். உடனேயே அந்தப் படத்தின் மூலம் லாபமாகக் கிடைத்த 24 லட்சம் ரூபாயை 3 பங்காகப் பிரித்து அந்த மூவருக்கும் பிரித்துக் கொடுத்தேன்.

அந்தப் பணத்தை வைத்து டாக்டர் நடேசன் மேற்கு மாம்பலத்தில் ஒரு சின்ன இடத்தை வாங்கி அதில் மருத்துவமனையைக் கட்டினார். காலப்போக்கில் தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் என்னுடைய பெயரிலேயே மிகப் பெரிய மருத்துவமனையைக் கட்டிவிட்டார். பதிவை எழுதியவர் கானா பிரபா

இப்போதுவரையிலும் அந்த மருத்துவமனை என்னுடையது என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் துளியும் உண்மையில்லை. அந்த மருத்துவமனை முழுக்க, முழுக்க டாக்டர் சி.நடேசனுக்கு மட்டுமே சொந்தமானது..” என்று சொல்லியிருக்கிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.

இதை அவரது YouTube தளத்திலும் 4 வருடங்களுக்கு முன்னர் காணலாம்.

ஆனால், இந்த வாரம் கடலோரக் கவிதைகள் படத்தைப் பார்க்கும்

போது அந்தப் படத்தில் மருத்துவராக வந்தவரை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்து படத்தின் LP record ஐப் பார்த்தேன். அதில் தயாரிப்பாளரில் ஒருவராக டாக்டர் C.நடேசனும் இருக்கிறார்.

அப்படியானால் படம் தயாரிக்கப்படும் போதே அவரையும் பாரதிராஜா உள்வாங்கி இருக்க வேண்டும்.

ஒளிப்பதிவாளரும், கடலோரக் கவிதைகள் படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்தவருமான இளவரசு அவர்களிடம் மீண்டும் உறுதிப்படுத்த

“அந்த டாக்டர் பாத்திரத்தில் நடித்தவர் டாக்டர் C.நடேசன் தானே?”

என்று கேட்டேன். 

“அவரே தான்” என்றால்

பாரதிராஜாவின் பகிர்வில் நினைவுத் தப்பலால் படம் ஓடிய லாபம் என்று சொல்லி இருக்கலாம்.


உண்மையில் பாரதிராஜாவுக்கு  இப்படியொரு “முதல் மரியாதை” செய்திருக்கிறார் டாக்டர் C.நடேசன்.

இன்று சென்னையில் இருக்கும் முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றாக வானளாவி நிற்கிறது.

அதை மேலிருந்தும் பார்த்து பூரிப்பில் இருப்பார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

அதுதான் “பாரதிராஜா மருத்துவமனை”.

கானா பிரபா

17.06.2026