இன்று கவிஞர் வாலியின்
நினைவு நாள் ❤️🙏
பல்கலை வேந்தன் இயக்குநர் கே. பாக்யராஜ் இற்கு அதிக பாடல்களை எழுதியதும், அவரின் முழுப் படத்துக்கும் அனைத்துப் பாடல்களும் எழுதியவர் என்ற வகையிலும் கவிஞர் வாலிக்குத் தனியிடம் உண்டு.
“ஒரு பல்லவியை எழுதிக் கொடுத்தா, அதை வாங்கி ரொம்ப நேரம் பார்த்துக் கொண்டே இருப்பார் பாக்யராஜ்,
ஒரு நாள் நான் சொன்னேன்
இந்தப் பல்லவியைப் பார்த்துக்கிட்டிருய்யா
நான் பக்கத்துல போயிட்டு வர்ரேன்
சரி! எங்கேன்னு பாக்யராஜ் கேட்பார்
திருச்சி வரைக்கும் போயிட்டு வர்ரேன் என்பேன்”
இப்படி வேடிக்கையாகச் சொல்வார் கவிஞர் வாலி.
அவர் அப்படிச் சொன்னதன் அடிநாதம், பாக்யராஜ் எவ்வளவு தூரம் தன் படப் பாடல் வரிகளில் நுணுக்கம் பார்ப்பார் என்பது தான்.
எங்க சின்ன ராசா படத்தின் கதையைச் சொல்லி விட்டு, படித்த பெண்ணான ராதாவை, படிக்காத பாமரன் பாக்யராஜ் திருமணம் முடித்த பின் எழும் பாடல்.
நான் தந்தனதான் பாட்டு
தாளம் இல்லை
என் துக்கம் ஏதும் கேட்க ஆளும் இல்லை
பாக்யராஜ் சொன்ன அந்தப் பல்லவியின் ஈரடி அப்படியே இருக்கட்டும் என்று விட்டு
நல்ல வைரக்கல்லு பக்கத்தில
உப்பத்தான்
சேர்த்து வச்சது அந்த சாமி
செஞ்ச தப்புதான்
நான் உப்புதான்
என்று படத்தின் கதையையே அந்த வரிகளுக்குள் அடக்கி விட்டார் வாலி என்று வியந்து பேசியிருக்கிறார் பாக்யராஜ்.
காவடிச் சிந்து படத்துக்காக பாக்யராஜ் எழுதிய “யாரோ சொன்னாங்க என்னன்னு” பாடலின் முழுப் பல்லவியும் அப்படியே இருக்கட்டும் என்று பெருந்தன்மையாக அனுமதித்துச் சரணத்துக்குப் போய் விட்டாராம் வாலி.
பாக்யராஜ் நடிக்காத படத்திற்கு அவர் இசையமைத்த போது வாலியாரின் வரிகளால் மாண்புறு பாடலாக அமைந்தவைகளில்
“பொண்ணு பாக்கப் போறேன்” படத்தில் அமைந்த
“சலசலவென ஓடும் குளிரோடையின் சங்கீதமே” பாடலெல்லாம் இருவரின் பேர் சொல்லும்.
தன்னுடைய ஆரம்ப காலத்தில் கதாநாயக அந்தஸ்து வந்த போதும், நாயகத் தனமான பாடல் வைக்கத் தயங்கிய போது,
“மூக்குத்திப் பூமேலே” (மெளன கீதங்கள்) பாடலின் சந்தோஷம், சோகம் இரண்டையும் எழுதி, பாக்யராஜுக்கு நம்பிக்கையூட்டினாராம் வாலி.
பின்னாளில் “ஒரு நாயகன் உதயமாகிறான்” பாடலைத் தாவணிக் கனவுகள் படத்துக்கு எழுதிய போது தன் வரிகளாலும் தான் சொன்னதை அங்கீகரித்தார் வாலியார்.
“ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” என்று எம்ஜிஆருக்காக “அன்பே வா” படத்துக்காக எழுதிய வாலிக்கே மீண்டும் வந்தது வாய்ப்பு அதே மெட்டினைத் தழுவிய “இந்த ராகமும்” பாடல் என் ரத்தத்தின் ரத்தமே படத்துக்காக.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் “அண்ணா நீ என் தெய்வம்” படத்துக்காகக் கொடுக்கப்பட்ட பாடல்களோடு, மேலதிகமாக பாக்யராஜ் இசையோடும் அந்தப் படக் காட்சிகளை உள்வாங்கி எடுத்த அவசரப் போலீஸ் 100 படத்திலுமாக இந்த இரண்டு படப் பாடல்களிலும் பயன்படுத்தப்பட்டவர் வாலி மட்டுமே, ஏனையோர் அந்தந்தப் படப் பாடல்களில் தனித்து இருந்தார்கள்.
கவிஞர் வாலி & இயக்குநர் கே.பாக்யராஜ் கூட்டணியில் அமைந்த பாடல்கள்.
கங்கை அமரன்
1. மூக்குத்திப் பூ மேலே (மெளன கீதங்கள்) சந்தோஷம்
2. மூக்குத்திப் பூ மேலே (மெளன கீதங்கள்) சோகம்
3. ருத்ரா படத்தில் கங்கை அமரன் மற்றும் வாலி பாடல் எழுதியிருக்கிறார்கள்
சங்கர் - கணேஷ் இரட்டையர் இசையில்
1. பொய் சாட்சி படத்தில் எல்லாப் பாடல்களும்( ஜி.ராமகிருஷ்ணன் இயக்கம்)
மூன்று பாடல்களில் “அதோ அந்தத் தென்றல்” அந்தக் காலத்தில் ஹிட் அடித்ததொன்று.
2. என் ரத்தத்தின் ரத்தமே ( இயக்கம் கே.விஜயன் & சுந்தர் கே.விஜயன்) 2.a) வாத்தியாரே சின்ன வாத்தியாரே
2.b) இந்த ராகமும்
3. எங்க சின்ன ராசா படத்தில் இடம்பெற்ற
3.a) கொண்டைச் சேவல் கூவும் நேரம்
3.b) நான் தந்தனத்தம் பாட்டு
3.c) என் ராத்தூக்கம் போச்சு
3.d) தென்பாண்டிச் சீமை ஓரமா
தேவா இசையில் அம்மா வந்தாச்சு (P.வாசு இயக்கம்) அனைத்துப் பாடல்களும்
1. தினத்தந்தி பேப்பரிலே
2. உனக்கொரு தாயிருக்கா
3. நந்தினி ஓ நந்தினி
4. உனக்காகப் பாடும் ராகம
5. சோப்பு மேடம்
பாக்யராஜ் இசையில்
1. இது நம்ம ஆளு (பாலகுமாரன் இயக்கம்)
1.a) நான் ஆளான தாமரை
1.b) சங்கீதம் பாட
1.c) மார்கழி மாசத்து
2. பொண்ணு பாக்கப் போறேன் (N.முருகேஷ் இயக்கம்)
சல சலவென ஓடும
3. சகாதேவன் மகாதேவன் (இராம நாராயணன் இயக்கம்) படத்தில் ஒரு ஜிகு ஜிகு ரயிலேறி ஒரு பாடல் மட்டும் பாக்யராஜ் ஏற்கனவே இசையமைத்தது பயன்பட்டது
4. ஆராரோ ஆரிரரோ
4.a) என் கண்ணுக்கொரு நிலவா
4.b) ஒரு மூணாம்பிறை பாரு
4.c) ஓடைப்பக்கம் ஒரு குருவி
4.d) என்ன பிகர்
4.e) தானா தலையாடுண்டா
5. காவடிச் சிந்து (படம் வெளிவரவில்லை, பட்டணந்தான் போகலாமடி படத்தில் ஜாமக்கோழி பாடல் மீளப் பயன்பட்டது)
5.a) சங்கீதம் எனக்கு
5.b) யாரோ சொன்னாங்க
5.c) என்ன குறை ராசாவே
5.d) ஜாமக்கோழி கூவியாச்சு
5.e) ஒரு பூ பூத்தாட
5.f) ஒரு எட்டுமுழ வேட்டி
5.g) வெத்தலைக்காடு
5.h) மாவோவ் அடிக்கடி
6. பவுனு பவுனு தான்
6.a) தேதி ஒண்ணு பாத்திருக்கேன்
6.b) முல்லைப்பூ வாசம்
7. அவசரப் போலீஸ் 100 படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் (ஶ்ரீதரின் அண்ணா நீ என் தெய்வம்) மற்றும் பாக்யராஜ் இசையில் அமைந்த பாடல்கள்
இசைஞானி இளையராஜா இசையில்
1. விடியும் வரை காத்திரு அனைத்துப் பாடல்களும்
1.a) அபி நயம் காட்டு
2.b) பேசு என் அன்பே
3.c) நீங்காத எண்ணம் ஒன்று
2. தூறல் நின்னு போச்சு
தாலாட்ட நான் பொறந்தேன்
3. தாவணிக் கனவுகள்
ஒரு நாயகன் உதயமாகிறான்
4. ராசுக்குட்டி
4.a) பாளையத்துப் பொண்ணு
4.b) வாடி என் செங்கமலம்
5. வீட்ல விசேசங்க (ஒரு பாடல் தவிர அனைத்தும்)
5.a) மலரே தென்றல் பாடும் (சந்தோஷ)
5.b) மலரே தென்றல் பாடும் (சோகம்)
5.c) இந்த பஸ்ஸு தான்
5.d) கொஞ்சம் சங்கீதம்
5.e) ஜிங்கான் ஜினுக்குத்தான்
6. ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி (அனைத்துப் பாடல்களும்)
6.a) வந்தாள் வந்தாள்
6.b) ராஜா ராஜா தான்
6.c) அழகு நிலா
6.d) கண்மணி காதல்
6.e) ஒரு மைனாக்குஞ்சு
6.f) எத்தனை நாளா
கவிஞர் வாலி & இயக்குநர் கே.பாக்யராஜ் கூட்டணியில் அமைந்த
90 வீதமான பாடல்கள் என் மனம் கவர்ந்தவை எனினும் இந்தப் பதிவை எழுதும் போது இரண்டு பாடல்கள் காதுக்குள் ஓடிக் கொண்டிருந்தன.
ஒன்று
தாலாட்ட நான் பொறந்தேன்
தாலே தாலேலோ
தலையாட்ட நீ பொறந்தே
ஆரோ ஆரிராரோ
https://youtu.be/PFN983wbvsA?si=5plMm15hIpUWPddC
இன்னொன்று
முல்லைப்பூ வாசம் உசுப்புது மானே மானே
https://youtu.be/5NSA5xPR-To?si=Nt4bbpnmpVU8-vRL
கே.பாக்யராஜ் இன் பாடலாசிரியர்கள் இன்னும் வருவார்கள்.
கானா பிரபா
18.07.2026

