Pages

Friday, June 12, 2026

இயக்குநர் இமயம் பாரதிராஜா & பாடும் நிலா SPB நட்பு

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவின் போது எனக்கு முதலில் நினைவுக்கு வந்த இன்னொருத்தர் SPB.

காரணம், 2014 ஆம் ஆண்டு தெலுங்கு ETV  'ஸ்வராபிஷேகம்' என்ற நிகழ்ச்சியில் மறைந்த புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (SPB), இயக்குநர் பாரதிராஜா உடனான தனது அரிய நட்பு மற்றும் நினைவுகள் குறித்துப் பகிர்ந்து கொண்டிருந்தார். அதை இன்னொரு பகிர்வு கொடுக்க அப்போது தேடினேன் கிட்டவில்லை.

இப்போது அந்தத் தொலைக்காட்சியே பகிர்ந்திருக்கிறது பாருங்கள்

https://www.youtube.com/watch?v=9bhAZY92mkU&t=132s

SPB சொன்ன கருத்துகளைத் தமிழாக்கித் தருகின்றேன்

பாரதிராஜா ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்துகொண்டிருந்த காலத்திலிருந்தே எஸ்பிபியின் நட்புத் தொடங்கியது. ஆரம்ப காலத்தில் பாரதிராஜா தமிழில் நாடகங்களை எழுதி, அவரே அதில் கதாநாயகனாகவும் நடித்தார். அப்போது வளர்ந்து வரும் பாடகராக இருந்த எஸ்பிபி, அந்த நாடகங்களுக்குப் பின்னணி பாடியதோடு புல்லாங்குழலும் வாசித்துள்ளார். ஒரு நாடகக் காட்சியின் போது பாரதிராஜாவுக்கு ஒரு நல்ல சட்டை தேவைப்பட்டது. அப்போது 'ஆராதனா' படத்தில் ராஜேஷ் கன்னா அணிந்தது போன்ற ஒரு புதிய கிரீம் நிற சட்டையை எஸ்பிபி வைத்திருந்தார். நாடகத்தில் ஒரு காட்சிக்கு மட்டும் தருமாறு பாரதிராஜா கேட்க, எஸ்பிபியும் தனது சட்டையைக் கொடுத்துவிட்டு பாரதிராஜாவின் சட்டையை அணிந்துகொண்டார். ஆனால், மேடையில் உணர்ச்சிப்பூர்வமாக நடித்த பாரதிராஜா, அந்த அவசரத்திலும் ஆவேசத்திலும் எஸ்பிபியின் சட்டையைக் கிழித்துவிட்டார்! அதன் பிறகு அந்தச் சட்டை எஸ்பிபிக்குத் திரும்பக் கிடைக்கவே இல்லை.


எஸ்பிபி சொந்தமாகக் கார் வாங்கி, டிரைவர் இல்லாமல் அவரே ஓட்டிச் சென்ற காலங்களில், அவர் தூங்கிவிடக் கூடாது என்பதற்காகப் பாரதிராஜா முன் இருக்கையில் அமர்ந்து கதைகளைச் சொல்லிக்கொண்டே வருவார். '16 வயதினிலே', 'சிகப்பு ரோஜாக்கள்' போன்ற படங்களின் கதைகளை 45 வருடங்களுக்கு முன்பே பாரதிராஜா தன்னிடம் கூறியதாக எஸ்பிபி குறிப்பிடுகிறார். "யார் இதையெல்லாம் பார்ப்பார்கள், மிகவும் அட்வான்ஸாக இருக்கிறதே" என்று எஸ்பிபி கேட்டதற்கு, "ஒரு நாள் நான் இதை படமாக எடுத்து மக்களைப் பார்க்க வைப்பேன்" என்று பாரதிராஜா சவால் விட்டார். அவர்கள் இருவரும் இணைந்து முதலில் '16 வயதினிலே' படத்தின் தமிழ் பதிப்பைத் தயாரிக்கத் திட்டமிட்டனர். எழுத்துப் பதிவு கானா பிரபா.

ஆனால், இருவரிடமும் போதிய பணம் இல்லாததால் அந்தத் திட்டம் தள்ளிப்போனது.

இசைஞானி இளையராஜா மற்றும் அவரது சகோதரர்களை எஸ்பிபியிடம் முதலில் அனுப்பி வைத்தவர் பாரதிராஜா தான். மெட்ராஸில் தனது வீட்டில் எஸ்பிபி ஒரு சிறிய இசைக்குழுவுடன் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தபோது, பாரதிராஜா இவர்களை அனுப்பி எஸ்பிபியின் இசைக்குழுவில் வாய்ப்பு தருமாறு கேட்டுக்கொண்டார். பாரதிராஜாவின் படங்களில் வரும் பின்னணி இசையின் சிறு துண்டுகள் கூட அவருடைய சொந்த கற்பனையில் உதித்தவை. எஸ்பிபி தான் 'படமதி சந்தியாராகம்' (Padamati Sandhya Ragam)  என்ற படத்திற்கு இசையமைக்கும் போது, பாரதிராஜாவின் இந்த இசை உத்தியை உத்வேகமாகப் பெற்றுப் பயன்படுத்தியதாகக் கூறினார்.

பாரதிராஜாவின் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த 'முதல் மரியாதை' படத்தின் கதையை முதலில் எஸ்பிபியிடம் கூறி, அவர்தான் நடிக்க வேண்டும் என்று பாரதிராஜா கேட்டுள்ளார். படப்பிடிப்பிற்குத் தொடர்ந்து 40 நாட்கள் தேவைப்பட்டதால், தினமும் 6 பாடல்கள் வரை பாடிக்கொண்டிருந்த எஸ்பிபியால் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தான் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது தனக்கு இழப்பு என்றாலும், ஒரு சிறந்த காவியமாக அந்தப் படம் உருவாகி தேசிய அளவில் பல விருதுகளைப் பெற்றது குறித்து பெருமைப்படுவதாக எஸ்பிபி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

பகிர்வு : கானா பிரபா

இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள், தெலுங்கின் ஜாம்பவான்களோடு, இயக்குநர் இமயம் பாரதிராஜா மெய் சிலிர்த்துக் கண்ணீருடன் எஸ்பிபி பேச்சை ரசிக்கிறார். கூடவே இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரும் இருக்கிறார்.