Pages

Thursday, July 9, 2026

கே.பாக்யராஜின் பாடலாசிரியர்கள் ஆர்.பி.விஸ்வம் & பா.விஜய்


 

“முத்துத்தாரகை வான வீதி வர

தங்கத்தேரென பூவை தேடி வர

ஊர்கோல நேரமிது”

https://www.youtube.com/watch?v=37zQ4nrGnOk


என்ற அற்புதமான பாடல் கே.பாக்யராஜின் ஒரு கை ஓசை படத்தில் இடம்பெற்றது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் எஸ்பிபியுடன், சுசீலா பாடியிருப்பார்.

அந்தப் பாடலை எழுதியவர் பின்னாளில் பிரபல வில்லனாகத் திகழ்ந்த ஆர்.பி.விஸ்வம்.



இன்று பாடகர் உன்னிகிருஷ்ணனின் பிறந்த நாள்.

இயக்குநர் கே.பாக்ராஜின் பாடலாசிரியர்கள் என்று வரும் போது தவிர்க்க முடியாத இன்னொருவராக இருப்பவர் பா.விஜய்.

அந்த வகையில் இரண்டும் பொருந்திப் போகப் பயணிக்கிறது இந்தப் பதிவும்.


பாக்யராஜ் ஒரு தலை சிறந்த இயக்குநர் மட்டுமல்ல, தன்னை ஒரு பத்திரிகையாளராகவும் அடையாளப்படுத்த ஒரு வாய்ப்பு அமைந்தது “பாக்யா” சஞ்சிகை மூலம். 

சொல்லப் போனால் அவர் இயக்குநரான ஆரம்ப காலத்திலேயே அந்த முயற்சியில் இறங்கினாராம். ஆனால் பத்திரிகையாளர் சோலை கொடுத்த அறிவுரை “இரண்டு தோணியிலும் கால் வைக்க வேண்டாம்" என்று.

எனவே “பாக்யா” பத்திரிகை காலச் சூழலுக்கேற்ப வந்தது. புதிய புதிய கவிஞர்கள் அடையாளப்படுத்தப்பட்டார்கள்.


பாக்யராஜின் அண்ணன் வழியாக பா.விஜய் தனது 19 ஆவது வயதில் பாக்யராஜிடம் சேர்கிறார்.

“ஒரு தேர்ந்த சமையல்காரரிடம் தொழில் கற்றுக்கொள்ளப் போனால் இலையில் தண்ணீர் தெளிக்கும் நேர்த்தியில் இருந்து, உருசியான சமையல் கற்றுத் தரும் ஒரு வித்தைக்காரர் போலத்தான் பாக்யராஜ்" என்று தன் குருநாதர் பற்றிச் சிலாகிப்பார் பா.விஜய்.


பாக்யராஜே ஒரு தலை சிறந்த பாடலாசிரியராகப் பல்லவி ஆக்குவதில் வல்லவர்.

எடுத்த எடுப்பிலேயே திரைப்படத்துக்குப் பாட்டு எழுத அவரை ஈடுபடுத்தவில்லை. இரண்டாண்டுகள் மெட்டுக்குப் பாட்டு எழுத அவரிடம் கற்றுக் கொண்டேன் என்றார் பா.விஜய்.

அதையே பாக்யராஜும் சொல்லி இருக்கிறார். 


பாக்யராஜ் தன் ஊரில் இருந்த போது சக நாடகக்காரராக அறிமுகமானவர் ஆர்.பி.விஸ்வம். இருவரும் இணைந்தும் நாடகம் போட்டிருக்கிறார்கள்.

காலம் பின்னால் பாக்யராஜின் உதவி இயக்குநர் படையில் விஸ்வத்தையும் இணைத்தது.



இந்த நிலையில் ஞானப்பழம் படத்தை ஆர்.பி.விஸ்வம் இயக்கும் போது ஒரு இடைவேளைக்குப் பின் மீண்டும் பாக்யராஜ் இசையமைப்பாளர் ஆகிறார்.

அந்தப் படத்தில் பா.விஜய் பாடலாசிரியராகப் பிறக்கிறார்.


“யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்

 அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும்”

https://www.youtube.com/watch?v=QRWeVVy-rMk


ஞானப்பழம் படத்தில் மேலும் இரண்டு பாடல்களை எழுதியதோடு, தொடர்ந்து பாக்யராஜின் படங்களில் பாடல் எழுதும் வாய்ப்பையும் பெறுகிறார் பா.விஜய்.


சொக்கத் தங்கம் படத்தை புரட்சிக் கலைஞர் விஜயகாந்தை வைத்து கே.பாக்யராஜ் இயக்கிய போது பா.விஜய் கொடுத்த “என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு” 

https://www.youtube.com/watch?v=poEPQmpENPs

இன்னொரு குறிப்பிடத்தக்க முத்து.


“வித்தகக் கவிஞர்” என்ற அடையாளச் சிறப்பு மிக்க, முன்னணிப் பாடலாசிரியராக இன்று விளங்குகிறார் பா.விஜய்.

அதனிலும் பெருமை

“நீ திரைப்படப்பாட்டு எழுதுவது மட்டுமல்ல வெண்பாவும் மிகச் சிறப்பாக எழுதுகிறாய் அதனால் தான் உன்னை என் வாரிசு என்றேன்” என்று கவிஞர் வாலியின் பாட்டு வாரிசாக அடையாளப்பட்டார்.

காவிரியில் வந்து கங்கை

கை சேர்க்க வேண்டும்

நாமும் அதில் சென்று 

காதல் நீராட வேண்டும்

ஈழத்தில் போர் ஓய்ந்து

தேன் முல்லை பூ பூத்து

நீ சூட தர வேண்டுமே.....

கே.பாக்யராஜின் பாடலாசிரியர்கள் இன்னும் வருவார்கள்.


கானா பிரபா

09.07.2026